வேட்டைக்காரன் - மற்றுமொரு மசாலா!

Saturday, December 26, 2009 ·




விஜய் எட்டுக்குடி முருகனுக்கு எட்டுமுறை காவடி எடுத்து வேண்டிக் கொண்டாரோ என்னவோ தெரியவில்லை இனி நல்லப்படம் நடிக்கவே கூடாது என்று உறுதியாக இருக்கிறார் போல... படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால் பத்து நிமிடமாவது படத்தின் பாதிப்பு மனதில் இருக்க வேண்டும், ஆனால் இந்தப்படம் பார்த்தப்பிறகு அந்த பாதிப்பு எதுவும் இல்லை.

விஜய் படத்தின் கதையை பச்சபுள்ளைகிட்ட கேட்டாக்கூட பல்லுவிலக்காம பளிச்சின்னு சொல்லிடும் படம் பாக்குறத்துக்கு முன்னாடியே... இருந்தாலும் நானும் சொல்லிடறேன்... விஜய், தேவராஜ்(ஸ்ரீஹரி) என்னும் கடமை தவறாத போலீஸ் அதிகாரியின் வேலையில் கவரப்பட்டு அவரைப்போலவே போலீஸ் அதிகாரியாக வேண்டும் அன்று ஆசைப்படுகிறார்... நாலாவது அட்டம்டில் +2 பாஸ் செய்யும் அவர் தேவராஜ் படித்த அதே கல்லூரியில் படிக்க‌ சென்னை வருகிறார்... (இத்தோடு சரி, இனி அவர் அப்பா, அம்மாவை படத்தில் பார்க்கமுடியாது...) அங்கே செல்லா என்கிற ரவுடி, தான் பார்த்து, பிடித்துப்போன பெண்களை கற்பழிக்கிறார்(இதில் வேறு ஒருமுறை தொட்ட பெண்ணை அவர் மறுமுறை தொட மாட்டாராம்). அப்படி அவர் வகுப்பறைத்தோழிக்கு ஒரு சூழ்நிலை வருகிறது, அதில் தளையிட்டு செல்லாவை அடித்து துவைத்து பார்சல் செய்து ஹாஸ்பிடலுக்கு அனுப்பிவைக்கிறார்...

அதற்காக விஜயை கைது செய்து என்கவுண்டரில் போட்டுத்தள்ள முடிவு செய்கிறார் செல்லாவின் அளான போலீஸ் அதிகாரி கட்டப்பொம்மன் (ஷாயாஜி ஷிண்டே). செல்லாவின் அப்பாவான வேதநாயகம்(சலீம் கவுஸ்) விஜயை பழிவாங்க கதைக்குள் ஆஜராகிறார். அவர் தன் மகனை அடித்தவனையே தன் காரில் அழைத்துக்கொண்டு தன் வியாபார தலங்களை சுற்றிக்காட்டுகிறார்... அதை வைத்து விஜய் அவைகளையும், வேதநாயகத்தையும் எப்படி அழிக்கிறான் என்பதுதான் கதை (அப்பாடா...).

சண்டைக் காட்சிகளில் நிறைய ஆக்ரோசம் காட்டியிருக்கிறார்... ஆனால் எந்த சண்டையும் தரையில் இல்லை... ஆகாயத்தில் பறந்து பறந்து தான்... பாடல்கள் எல்லாமே பாஸ்ட் ட்ராக் தான்... நன்றாக தாளம்போட வைக்கிறது... வழக்கம் போல‌ நடனத்தில் அசத்தியிருக்கிறார் விஜய்... இந்த இரு விசயத்தையும் பொறுத்தவரை அவர் ரசிகர்களுக்கு வேட்டைத்தான் என்பதில் சந்தேகமில்லை... (சின்னத்தாமரை பாடலுக்கு விஜய் வைத்திருக்கும் ஹேர் ஸ்டைல் இருக்கிறதே... கண்றாவியாக இருக்கிறது. இந்த ஸ்டைல் விஜய்க்கு நண்பர்கள் வைத்திருக்கும் பெயர் 'ஒண்டிப்புலி'. 'நான் அடிச்சா' பாட்டை கூட இப்படித்தான் பாடறாங்க, 'நான் நடிச்சா தாங்க மாட்ட.. நாலு நாளு தூங்கமாட்ட... போய்பாரு வீடு போயி சேர மாட்டன்னு...').


காமடி நடிகர்களை ஏன் தவிர்த்தார்கள் என்று தெரியவில்லை... அந்த வேண்டாத வேலையையும் அவரே செய்கிறார்.. காமடி அவருக்கு வரும் தான் என்றாலும் இந்த படத்தில் அவ்வளவாக சிரிப்பு வரவில்லை என்பது தான் உண்மை.



அனுஷ்கா வருகிறார்... சிரிக்கிறார்... அழுகிறார்... முடிந்த அளவுக்கு உடம்பை காட்டுகிறார்... நடனமாடுகிறார்... நடிக்கிறாரா என்றால் அதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை இயக்குனர் பாபு சிவன், அந்த மாதிரி தர்மசங்கடங்களை கொடுக்காமல் இருந்ததற்க்கு அவர் இயக்குனருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்... அதற்கு மேல் ஒன்றுமில்லை அவரைப்பற்றி சொல்ல.

முழுசாய் மூன்று மணி நேரத்தை முழுங்கி ஏப்பம் விடுகிறது படம்... முதல் பாதி அப்படி, இப்படி ஜாலியாகப் போய்விடுகிறது, அதற்காக இயக்குனரை பாராட்டலாம்... இரண்டாவது பாதியிருக்கிறதே... அப்பப்பா... அங்கிருந்து தப்பித்து நாம் வெளியே வந்துவிட்டால் மாசானி அம்மனுக்கு கோவிலுக்கு போய் மாவிளக்கு போட்டு அதற்கான வேண்டுதலை நிறைவேத்தலாம். இடையிலேயே வில்லன் 'ஹீரோ பெரிய ஆள்...' என்றும் அவனை நாம் ஒன்றும் பண்ணமுடியாது என்றும் ஹீரோ புகழ ஆரம்பித்துவிட்டால் அதற்குப்பிறகு எப்படி படம் விறுவிறுப்பாக போகும் என்பதை இயக்குனரிடம் கேட்டவேண்டும்.

பஞ்ச் டயலாக் என்ற பெயரில் கண்டதையும் பேசி காதில் கலவரத்தை உண்டு பண்ணுகிற வேலையை இனியும் விஜய் நிறுத்தாமல் செய்தால் காதுகள் காலாவதியாகும் சட்டத்தின் கீழ் அவர் மீது ஏதாவது வழக்கு தொடரலாமா என்று யாராவது ஓய்வுபெற்ற நீதிபதியிடம் விசாரிக்க வேண்டும்.

விஜய் தன் நடிப்பின் மீது நம்பிக்கை இழந்து வருகிறார் என்று தோன்றுகிறது. அதனால் தான் இப்படி மசாலா மேல மசாலா தடவி நம்ம மண்டையில புகுந்து மட்டன் பிரியாணி கிண்றார்ன்னு நினைக்கிறேன்... விஜய் சார், உங்களுக்கும் நடிக்க வரும்... நம்பிக்கையில்லேனா நீங்க நடிச்ச துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மாரியாதை போன்ற பழைய படங்களோட பழைய டிவிடி வாங்கி போட்டுப்பாருங்க, அப்பவாவது அது உங்களுக்கு புரியும். ரஜினிப்படம் நல்லாயில்லன்னாலே நாளைக்கு வந்து மீதிய பாத்துக்கிறேன்னு சொல்லிட்டு இடைவேளையோட எழுந்திருச்சி போயிடறாங்க... அதனால இனிமேலாவது நடிக்க முயற்சிப்பண்ணுங்க... பஞ்சையும், மசாலாவையும் வச்சு மீதி காலத்த ஓட்ட ட்ரை பண்ணாதீங்க.

வெயில்ல‌ வெளியே போனா வெக்கை, விஜய் படத்துக்குப் போன மொக்கை எங்கிற பார்முலாவை சீக்கிரம் மாத்துங்க மிஸ்டர் இளய தளபதி!

0 comments:

வணக்கம்

வணக்கம்
வணக்கம்! உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

வலம் வரும் நண்பர்கள்

நாட்டு கொடிகளுடன் நண்பர்கள்

free counters

Archives

About this blog

என் நண்பனிடம் இருந்து கற்றுக்கொண்டதன் மூலம் 26.12.2009 அன்றிலிருந்து தொடங்கப்பட்ட இந்த வலைப்பூ முற்றுமுழுதாக சினிமா செய்திகளை தாங்கியது "தமிழ்சிகரம்"